யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி மிக இரகசியமாக இடித்தழிக்கப்பட்டமை குறித்து எழுந்த எதிர்ப்பலைகளுகளுக்கு மத்தியில் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு இந்தியா தனது கரிசனையை வெளிப்படுத்திய பின்னரே நிலைமையைச் சமாளிக்கும் வகையில் தூபி மீளமைக்கப்படுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட மறு நாள் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்துத் தனது கவலையை வெளியிட்டார்.
இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு குறித்த கொழும்பின் முணுமுணுப்புக்களுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு குறித்த தகவல்கள் உடனடியாக பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக நினைவுத் தூபி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்துத் விவாதித்ததை பிரதமர் மகிந்தவின் ஊடகச் செயலாளர் ரொஹாான் வெலிவிட . ஞாயிற்றுக்கிழமை தி இந்துவிடம் உறுதி செய்தார்.
போரில் கொல்லப்பட்ட மக்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடிக்கப்பட்டமை கடும் எதிர்ப்பலைகளைத் தூண்டி, இலங்கை அரசுக் எதிராக கடும் கண்டனங்கள் வெளியான நிலையிலேயே திடீரென குத்துக்கரணம் அடித்து இடிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்போவதாக திங்கட்கிழமை அதிகாலையிலேயே துணைவேந்தர் அறிவித்தார்.
பாதுகாப்பு துறையில், புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல தரப்புக்களின் கடும் அழுத்தங்களால் தான் நினைவுத் தூபியை அகற்றியதாக துணைவேந்தர் சிறீசற்குணராஜா தெரிவித்தார்.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கொந்தழிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையைத் தணிக்க நினைவுத் தூபியை மீள அமைக்க அடிக்கல் நாட்டுவதாக அவர் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் மகிந்தவைச் சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர், தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளன. அங்கு பெரும் கொதிப்பலை எழுந்துள்ளது. எனவே, பதற்றத்தை தணிக்க உடனடியாகச் செயற்படுமாறு மகிந்தவை கேட்டுக்கொண்டதாக சண்டே ரைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த அழுத்தங்களை அடுத்தே இந்த விடயத்தில் தலையிட்ட பிரதமர் மகிந்த, இடிக்கப்பட்ட நினைவுத் தூபியை மீள அமைக்கும் நடவடிக்கைக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தி இந்து தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமைக்கப்படவுள்ள நினைவுச் சின்னம் அமைதியின் சின்னமாக இருக்கும் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியா் சிறீசற்குணராஜா தெரிவித்ததாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தூபி மீளமைப்பு குறித்து ஆராய மாணவர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் பேராசிரியா் சிறீசற்குணராஜா தி இந்துவிடம் கூறியுள்ளார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்